அக்டோபர் 10 - உலக மனநல நாள், மரண தண்டனைக்கு எதிரான 11வது உலக நாள்
அக்.10,2013. அக்டோபர் 10, இவ்வியாழனன்று, உலகெங்கும் உலக மனநல நாள் சிறப்பிக்கப்படுகிறது.
மனநல உலக ஒன்றியம் என்ற அமைப்பினரின் இந்த முயற்சிக்கு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்
தன் முழு ஆதரவை அளித்து வருகிறது. "மனநலமும், வயது முதிர்ந்தோரும்" என்பது, இவ்வாண்டு
சிறப்பிக்கப்படும் உலக மனநல நாளுக்கென வழங்கப்பட்டுள்ள மையக் கருத்தாகும். "பிளவுபட்ட
மனநிலையுடன் வாழ்தல்" என்பது வருகிற ஆண்டில் இந்த நாளுக்கென குறிக்கப்பட்டுள்ள மையக்
கருத்தென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 10, இவ்வியாழனன்று, மரண தண்டனைக்கு
எதிரான 11வது உலக நாளும் சிறப்பிக்கப்படுகிறது. "குற்றங்களை நிறுத்து, வாழ்வை அல்ல"
என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இந்நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக் கருத்து. Amnesty
International என்ற உலக அமைப்பின் கணக்குப்படி, உலகில் இன்று 140 நாடுகள் மரண தண்டனையை
ஒழித்துள்ளன. 2011ம் ஆண்டில், 63 நாடுகளில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டன என்றும்,
21 நாடுகளில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் Amnesty International கூறியுள்ளது.