தஞ்சம் தேடிவரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும், வசதிகளும் செய்து
தருவது இத்தாலிய அரசின் கடமை - ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்
அக்.09,2013. இத்தாலியின் Lampedusa தீவில் தஞ்சம் தேடிவரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும்,
வசதிகளும் செய்து தருவது இத்தாலிய அரசின் கடமை என்று, இத்தாலியில் செயலாற்றும் ஐ.நா.
மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் Laurens Jolles அவர்கள் இத்தாலிய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இம்மாதம்
3ம் தேதி ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களைத் தாங்கி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி
மூழ்கிய நிகழ்வையடுத்து, ஐ.நா. அதிகாரி இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார். Lampedusaவுக்கு
வரும் அகதிகள் தங்குமிடம் துவக்கத்தில் 850பேர் தங்கும் அளவு இருந்ததென்றும், 2011ம்
ஆண்டு அங்கு நிகழ்ந்த ஒரு தீவிபத்தைத் தொடர்ந்து, அங்கு தற்போது 250 பேர் மட்டுமே தங்கும்
வசதிகள் உள்ளனவென்றும் கூறும் ஐ.நா. அதிகாரி, இச்சூழலில் அங்கு வரும் பல குடும்பங்கள்
மழையிலும் வெளியில் நிற்கவேண்டிய பரிதாப நிலையை எடுத்துரைத்துள்ளார். புலம் பெயர்ந்தோரை
வரவேற்கும் முயற்சிகளிலும், கடலில் விபத்துக்கள் நிகழும்போது காப்பாற்றும் முயற்சிகளிலும்
இத்தாலிய அரசு இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. அதிகாரி Jolles
தன் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.