2013-10-09 15:58:43

அர்ஜென்டீனா அரசுத்தலைவர் விரைவில் குணமடைய திருத்தந்தை செபம்


அக்.09,2013. தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்துவரும் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernandez de Kirchner அவர்கள், விரைவில் முழுகுணமடைய, தான் செபிப்பதாக தந்திச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்புற மண்டை ஓட்டுக்கும் மூளைக்கும் இடையே இரத்தம் கட்டியிருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அக்கட்டி எடுக்கப்பட்டு குணமடைந்து வருகிறார் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Kirchner.
அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்களுக்காக, Luján அன்னைமரியிடம் தான் செபிப்பதாக அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் செபத்தையும் தெரிவித்துள்ளார்.
அரசுத்தலைவர் Cristina Kirchner அவர்களின் கணவரான முன்னாள் அரசுத்தலைவர் Nestor Kirchner, 2010ம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.