மூன்றாவது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், அக்.5-19,2014
அக்.08,2013. மூன்றாவது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், 2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல்
19 வரை வத்திக்கானில் நடைபெறும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதாக, திருப்பீட
பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி
சவால்கள் என்பது, இந்தச் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருஅவையில்
உடனடித்தேவைகள் அதிகமாக இருக்கும்போது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் கூட்டப்படுகிறது.
இதுவரை 1969 மற்றும் 1985ம் ஆண்டுகளில் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்கள் கூட்டப்பட்டுள்ளன. கத்தோலிக்கத்
திருஅவையில் உலக ஆயர்கள் மாமன்றம் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும். 1965ம்
ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றபோது, உலகளாவியத்
திருஅவையின் பணிக்கு, திருத்தந்தைக்கு ஆயர்களின் உதவி அவசியம் என்றுரைத்து திருத்தந்தை
ஆறாம் பவுல் உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார்.