2013-10-07 15:34:08

கற்றனைத்தூறும் ... செயின்ட் தாமஸ் மவுண்ட்


செயின்ட் தாமஸ் மவுண்ட் அதாவது புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது, பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலையான புனித தோமையார் மலை, சென்னையிலுள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவப் பயிற்சி மையம் ஒன்றும் உள்ளது. இம்மலை கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 300 அடி உயரம் கொண்டது. இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமையார் மறைசாட்சியாக இம்மலையில்தான் கொல்லப்பட்டார். இவர், இந்தியாவுக்கு முதன்முதலில் கிறிஸ்தவத்தைக் கொண்டுவந்தவர். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர், இந்தியாவின் Gondophare அரசரின் வணிகர் Habban என்பவருடன் தோமையாருக்குக் தொடர்பு ஏற்பட்டது. இந்த வணிகருடன் கி.பி.52ம் ஆண்டில் தற்போதைய கேரளாவின் மலபார் கடற்கரையில், கிரங்கனூரில்(Cranganore) வந்திறங்கினார். இக்கடற்கரைப் பகுதியில் பல ஆலயங்களைக் கட்டிய பின்னர், இந்தியாவின் கோரமண்டல் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும், பின்னர் தெற்குப் பகுதிக்கும் வந்தார் அப்புனிதர். அங்கு நற்செய்தி அறிவித்தபோது, எதிரிகளுக்குப் பயந்து முதலில் லிட்டில் மவுண்ட் சென்றார். பின்னர் தற்போதைய தோமையார் மலையாகிய பரங்கிமலை சென்றார். அம்மலையில் அவர் செபத்தில் ஆழ்ந்திருந்தபோது கி.பி.72ம் ஆண்டில் பகைவர்களால் கொலைசெய்யப்பட்டார். புனித தோமையார் உயிரிழந்த இடத்திலுள்ள ஆலயத்தில் அவர் வழிபட்ட சிலுவை இன்றும் வைத்து போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஓவியங்கள் இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம், இயேசு, அவரின் 12 திருத்தூதர்கள் என ஏராளமான பழமை மாறாத ஓவியங்கள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையானவை. இந்த ஆலயம் 2011ம் ஆண்டு தேசியத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. புனித தோமையாரின் மலையில் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் உள்ளன. சென்னையின் முழு அளவையும் இந்த மலையின் மீதிருந்து கண்டு இரசிக்கலாம்.

ஆதாரம் : இணையதளம்







All the contents on this site are copyrighted ©.