2013-10-05 15:34:14

பொதுக்காலம் - 27ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஐந்து நாட்களுக்கு முன் CNS என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. குறிப்பாக, அந்தச் செய்தியின் ஆரம்ப வரிகள்...
இளவயது தந்தை ஒருவரும் அவரது சிறு வயது மகனும் இரவில் நடந்து சென்றபோது, திடீரென அந்தக் குழந்தை தந்தையைப் பார்த்து, “அப்பா, அவர்கள் மீண்டும் குண்டுபோட்டு தாக்க வருகிறார்களா?” என்று கேட்டான். தந்தைக்கு ஒன்றும் விளங்காமல், வானத்தைப் பார்த்தார். அங்கு வானத்தில் மின்னிய விண்மீன்களை அக்குழந்தை பார்த்து, அந்தக் கேள்வியைக் கேட்டான் என்பதைப் புரிந்துகொண்டார். அக்கேள்வி தன் மனதில் ஆழமான காயங்களை உருவாக்கின என்றும், விண்மீன்களைக் கண்டு தன் மகன் பயப்படத் தேவையில்லை என்பதை எப்படி தன் மகனுக்குப் புரியவைப்பது என அறியாமல் தான் கலங்கி நின்றதாகவும் தந்தை இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவிலிருந்து துருக்கிக்குத் தப்பித்து வந்துள்ள Ali Ahmad என்ற அந்த இளவயது தந்தை ஒரு மருத்துவப் பணியாளர். அவரது மகன், விவரம் தெரிந்த நாள்முதல், வானில் ஒளியைக் கண்டபோதெல்லாம் பயந்து நடுங்கி வாழ்பவன் என்பதை, CNS என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும் Ahmad, சிரியா மக்களுக்கு தற்போது மிக அதிகத் தேவையானது, மன நல மருத்துவர்களே என்று கூறுகிறார்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்தத் தேவை மிக அதிகம் உள்ளது என்று சிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றும் Ole Nasser என்பவர் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். Ali Ahmadன் மகன் மட்டுமல்ல, உலகெங்கும் பல கோடிக் குழந்தைகள் பிறந்த நாள் முதல் வன்முறைகளையே கண்டு வளர்வதால், இவ்வுலகம் எவ்வகையில் மாறப்போகிறதோ என்று நாம் கவலைப்படவேண்டிய நேரம் இது.

உலக வரலாற்றின் பெரும்பாலான பக்கங்கள் வன்முறையால் காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. மனித வரலாற்றில், வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளன. இன்றும் பதில்கள் சொல்லி வருகிறோம். வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்று வழிகளைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகச் சொல்வது முதல் வழி. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற இந்த வழியை நியாயப்படுத்த, ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்று சமாதானமும் சொல்லிக் கொள்ளலாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன், Ali al-Khawahir என்ற 14 வயது இளைஞருக்கும் அவரது நண்பர் Mohammed al-Hazimக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலில், Ali al-Khawahir, Mohammedன் முதுகில் கத்தியால் குத்திவிட்டார். இதனால், Mohammed தன் இடுப்புக்குக் கீழ் செயல்கள் இழந்துவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர், 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியைத் தந்தது. Mohammedஐக் கத்தியால் குத்திய Ali al-Khawahirன் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, அவரும் இடுப்புக்குக் கீழ் செயலிழந்து வாழவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு. இத்தீர்ப்பைக் கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்புக்களின் கண்டனக் குரல்களால் இந்தத் தண்டனை உடனே நிறைவேற்றப்படவில்லை.
2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான செய்திகளின்படி, கடந்த பத்தாண்டுகளாக சிறையில் இருக்கும் Ali al-Khawahir, தனது குற்றத்திற்கு ஈடாக 10 இலட்சம் ரியால், அதாவது 2,70,000 டாலர்கள் – 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் - செலுத்தவேண்டும், அல்லது அவர் இடுப்புக்குக் கீழ் செயல் இழந்து வாழவேண்டும் என்ற தீர்ப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லை என்று அச்செய்திகள் கூறின.
இது போன்ற தண்டனையை மருத்துவ முறையில் எப்படி செய்யமுடியும் என்று இந்த நீதிபதி பல மருத்துவமனைகளிடம் கேட்டதாகவும், அதற்கு ஒரு மருத்துவமனை ஆலோசனைகள் தந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது, என்னை மிகவும் அதிகமாகப் பாதித்தது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதியாகிலும் தனி மனிதர், அவர் ஏதோ அறிவுக் கோளாரினால் இத்தகையத் தீர்ப்பை வழங்கியுள்ளார் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இதனை எப்படி செய்வது என்று மருத்துவமனை ஒன்று ஆலோசனை வழங்கியுள்ளது என்பதைக் கேட்கும்போதுதான் நாம் உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம், அச்சம் கொள்கிறோம். வன்முறைகள் ஒரு நிறுவனத்தைப் போல தொழில்மயமாக்கப்பட்டு வருகிறதோ என்று கவலைப்படுகிறோம். வன்முறைகளுக்கு வன்முறைகளால் பதில் சொல்வது முதல் வழி. கண்ணுக்குக் கண் என்று இவ்வுலகம் வாழ்ந்தால் அனைவருமே விழியிழந்து அலையவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தவர் நமது அண்ணல் காந்தியடிகள்.

தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட வன்முறைகளுக்கு மனித நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் இரண்டாவது வழி.... அபக்கூக்கு என்ற இறைவாக்கினர் எழுப்பும் முறையீட்டை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:
இறைவாக்கினர் அபக்கூக்கு 1 : 2-3
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்: நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஒவ்வொரு நாளும் நமது பத்திரிக்கைகளைப் பிரிக்கும்போது, அல்லது தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும்போது இறைவாக்கினரின் வேதனை வார்த்தைகள் தாமே நமது மனதிலும் ஒலிக்கின்றன.
அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளை உலகெங்கும் வன்முறையற்ற நாளெனச் சிறப்பிக்க வேண்டுமென ஐ.நா. அறிவித்துள்ளது. காந்தி பிறந்த இந்தியாவில், அவரது பிறந்த நாளுக்கு அடுத்தநாள், அக்டோபர் 3ம் தேதி, வன்முறை ஏதும் அறியாத 7 கிறிஸ்தவர்களுக்கு ஒடிஸ்ஸா மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
2008ம் ஆண்டு ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், Laxmanananda Saraswati என்ற இந்துமதக் குரு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், இந்து அடிப்படைவாதத்தினரின் கட்டுக்கடங்காத வன்முறைகளுக்குப் பலியாயினர். இந்துமதக் குருவைக் கொன்றது தாங்களே என்று மாவோயிஸ்ட் குழு பொறுப்பேற்றுள்ள போதிலும், மூன்று நாட்களுக்கு முன், 7 அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது இந்தக் கொலைப்பழியைச் சுமத்தி, நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தியில் நிகழ்ந்த வன்முறைகள், குஜராத்தில் நடந்த வன்முறைகள், மும்பையில் நடந்த வன்முறைகள் என்று நமது நீதி மன்றங்களில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட வன்முறை வழக்குகள், வன்முறைக்கும் நீதிக்கும் புது இலக்கணங்கள் சொல்லி வருகின்றன.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னரும் தொடரும் வன்முறைகள், பாகிஸ்தானில் வெள்ளம் சூழ்ந்த நேரத்திலும் எழுந்த வன்முறைகள்... இப்படி வன்முறையிலேயே ஊறிப் போயுள்ளது உலகம். மனித வரலாற்றைப் பல்வேறு யுகங்களாக நாம் பிரிக்கிறோம். நாம் வாழும் இக்காலத்தை வன்முறையின் யுகம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நம்பிக்கையைக் குழிதோண்டி புதைக்கும் வன்முறைகளுக்கு விடை தேடிய இறைவாக்கினருக்கு இறைவன் தந்த பதில் இது:
இறைவாக்கினர் அபக்கூக்கு 2 : 2-4
ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இறைவனிடம் முறையிட்டு, அவரது நீதிக்காகக் காத்திருப்பது; காலம் தாழ்த்தினாலும் இந்த நீதி கட்டாயம் வரும் என்று நம்பிக்கை கொள்வது வன்முறைக்கு நாம் பதில் தரும் இரண்டாவது வழி. இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்:
லூக்கா நற்செய்தி 17 : 5-10
அக்காலத்தில், திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்றாவது வழி, திருவள்ளுவர் உட்பட, பல உயர்ந்த உள்ளங்கள் சொன்ன வழி. தன் வார்த்தைகளாலும், வாழ்வாலும் இயேசு காட்டிய வழி: “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”.
எல் சால்வதோர் நாட்டில், நீதிக்காக குரல் கொடுத்து, அதன் விளைவாக, 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி திருப்பலி நேரத்தில் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கூற்றுக்கள் அடங்கிய ஒரு புத்தகம் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புத்தகத்தின் தலைப்பு: ‘அன்பின் வன்முறை.’ (THE VIOLENCE OF LOVE Oscar Romero. Compiled and translated by James R.Brockman,S.J.) இந்நூலில் காணப்படும் பேராயர் ரொமேரோவின் கூற்றுக்களில் ஒன்று இது: நான் பறைசாற்றும் வன்முறை கத்தியைச் சார்ந்ததல்ல. வெறுப்பை வளர்ப்பதல்ல. அன்பைச் சார்ந்தது. இந்த வன்முறையால் அழிவுக்குப் பயன்படும் ஆயுதங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படும் கருவிகளாக மாற்றப்படும். (THE VIOLENCE we preach is not the violence of the sword, the violence of hatred. It is the violence of love, of brotherhood, the violence that wills to beat weapons into sickles for work. – Reference to Isaiah 2:4 - - Oscar Romero, November 27, 1977)

அகிம்சை என்ற அற்புத வழியை இவ்வுலகிற்குச் சொல்லித்தந்த காந்தி அடிகளின் கூற்றுக்களில் பல வன்முறைக்கு அன்பை, பொறுமையை பதிலாகத் தரக்கூடிய மூன்றாம் வழியை வலியுறுத்துகின்றன.
"வன்முறையற்ற அகிம்சை என்பது நாம் உடுத்தும் சட்டையைப் போல வேண்டும்போது பயன் படுத்தும் கொள்கை அன்று. நம் வாழ்வின் அடித்தளமாய் இருப்பது அது."
“Nonviolence is not a garment to be put on and off at will. Its seat is in the heart, and it must be an inseparable part of our being.”
தற்காலிகமாய் நன்மை விளைவிப்பதைப் போல் தெரிந்தாலும், வன்முறை நிரந்தரமாய் தீமையை மட்டுமே விளைவிக்கும். எனவே, அதை நான் வன்மையாய் எதிர்க்கிறேன்.
“I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent.”

வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, அரசியல் மற்றும் பொது வாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரிகின்றன. நமது செய்திகளிலும் இவை அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. நமது இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது காட்டப்படும் வன்முறைகள், பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள்... இந்த வன்முறைகள் வெகு ஆழமானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மெளனமாக சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.

வன்முறையற்ற அகிம்சை வழிகள் இறுதியில் வெல்லும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய காந்தியடிகளின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி. "அமைதியின் தூதனாய் என்னை மாற்றும்" என்ற உயர்ந்ததொரு செபத்தை இவ்வுலகிற்குத் தந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாள் அக்டோபர் 4ம் தேதி. அர்த்தமுள்ள இவ்விரு நாட்களையும் தொடரும் இந்த ஞாயிறன்று, வன்முறையின் பல வடிவங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கைவிடாமல், நன்மையை, உண்மையைப் பின்பற்ற இறையருளை வேண்டுவோம். இந்த நம்பிக்கை நம்மிடம் கடுகளவே இருந்தாலும் போதும்... மலைகளையும் பெயர்ந்துபோகச் செய்யமுடியும். வெறுப்பு எனும் கோட்டையை தகர்த்துவிட முடியும். அன்பு அனைத்தையும் வெல்லும். தொடர்ந்து நம்புவோம். வன்முறைக்கு அன்பை பதிலாக வழங்கி, வாழ்ந்து காட்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.