திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கருக்கும், உலகமனைத்துக்கும் எடுத்துக்காட்டு
அக்.05,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி மற்றும் சந்திப்புக்களின் செய்தி
விசுவாசிகளுக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என்று, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கு
ஒன்றில் கூறப்பட்டது. பொதுவான நலனுக்குச் சேர்ந்து உழைப்பதற்கு அடிக்கடி நம்மைப்
பிரிக்கும் முற்போக்கு மற்றும் பழமைவாதக் கருத்து முரண்பாடுகளிலிருந்து நாம் விரைவில்
வெளியேற வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கரை அழைப்பதாக இக்கருத்தரங்கில்
கலந்துகொண்ட அமெரிக்க ஆயர் பேரவை பேச்சாளர் Kim Daniels கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் நம்பிக்கையோடு உலகில் செயல்படுவதாகவும், நாமும் அவ்வாறே செயல்பட வேண்டுமென அவர்
அழைப்பதாகவும் Daniels மேலும் கூறினார். வாஷிங்டன் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேசிய வாஷிங்டன் கர்தினால் Donald W. Wuerl, நற்செய்தி அறிவிப்புப்பணியை
புதிய வழியில் செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துக்காட்டாய் உள்ளார்
என்று கூறினார்.