மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க ஆயர் வேண்டுகோள்
செப்.30,2013. மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 விழுக்காட்டு மாணவர்கள் 6ம் வகுப்போடு கல்வியை
நிறுத்திவருவது, அதிர்ச்சியைத் தரும் செய்தியாக உள்ளது என தன் கவலையை வெளியிட்டுள்ளார்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா. மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேம்பாடு
தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்ட
ஆயர் பொன்னையா அவர்கள், அதே போன்று 20 வயதுக்கும் குறைந்த இளம்பெண்கள் கர்ப்பமடைவதும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார். தேசிய
அளவில் 20 வயதுக்கும் குறைந்த இளம்பெண்கள் 6.5 விழுக்காட்டினர் வீதம் கர்ப்பமடையும் நிலையில்,
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் 10.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது, அவர்களின் கல்வியினையும்
பாதிக்கின்றது என்றார் ஆயர். பல்லின, பலமத, பலமொழி கலாசாரங்களைக் கொண்டச் சூழலில்
ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தழைத்தோங்க கல்வி அடிப்படை காரணமாகும் என்பதை வலியுறுத்திய
மட்டக்களப்பு ஆயர் பொன்னையா அவர்கள், மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்தவும் கல்வியை
ஊக்கவிக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.