திருத்தந்தை : மனிதகுல வருங்காலம், முதியோரிலும் குழந்தைகளிலும் உள்ளது
செப்.30,2013. மக்களின் வருங்காலம் இங்கேதான் உள்ளது, அதாவது முதியோரிலும் குழந்தைகளிலும்
அது உள்ளது என இத்திங்களன்று புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில்
மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். குழந்தைகளையும் முதியோரையும் குறித்து
அக்கறைகொள்ளாத சமூகத்திற்கு வருங்காலம் என்று ஒன்று இல்லை, ஏனெனில் அங்கு பழைய நினைவுகளும்
இல்லை, வாக்குறுதிகளும் இல்லை என்ற திருத்தந்தை, இவ்விருவரையும் சார்ந்தே வருங்காலம்
உள்ளது எனவும் எடுத்துரைத்தார். இத்தகைய பின்னணியில் திருஅவை குறித்தும் எடுத்துரைத்த
திருத்தந்தை, திருஅவையில் பழைய நினைவுகளும் வாக்குறுதிகளும் மறக்கப்படும்போது, அத்திருஅவை,
அதிகாரத்திற்கான போராட்டத்தைக் கொண்டதாகவும், பொறாமைக்குணம் நிறைந்ததாகவும் மாறும் எனவும்
எடுத்துரைத்தார். முதியோர்கள் நமக்கு அமைதியை நினைவூட்டுபவர்களாக உள்ளார்கள் என்ற
திருத்தந்தை, அமைதியும் மகிழ்வுமே திருஅவையின் சூழல் எனவும் தெரிவித்தார்.