தாய் ஒருவர் தன் ஐந்து
வயது மகளுடன் கடைக்குச் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும்
இடத்திற்குச் சென்றபோது, கடைக்காரர், தாயுடன் நின்ற சிறுமியைப் பார்த்து, மிட்டாய்கள்
இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு மிட்டாய்களை எடுத்துக்கொள்."
என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம்,
"எனக்கு மிட்டாய் ரொம்பப் பிடிக்கும்." என்று சொன்னாள். சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாளோ
என்று எண்ணியக் கடைக்காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார்.
கடைக்காரர் தந்த மிட்டாய்களை, சிறுமி இருகைகளிலும் பெற்றுக்கொண்டார். தாயும், மகளும்
வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக்கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?"
என்று தாய் கேட்டார். அதற்கு, அச்சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர்
கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள். அச்சிறுமியின் சிந்தனை ஓட்டத்தை,
அறிவுத்திறமை என்றோ, தந்திரம் என்றோ முடிவு செய்யலாம். அச்சிறுமிக்கு இவ்வளவு பேராசை
கூடாது என்று நம்மில் சிலர் தீர்ப்பும் எழுதலாம். அச்சிறுமிக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு
முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி
ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும்
நாம் அனைவரும் இவ்வகை எண்ணங்களை அக்குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும். அச்சிறுமியின்
பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நாம் குறை கூறக்கூடாது. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும்
இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்த்துவருகிறது. எனவே, இக்குழந்தையின்
பேராசைக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டும்.
‘ஆசையே
அனைத்து துனபங்களுக்கும் காரணம்’ என்று புத்தர் கூறியது தலைகீழாக மாறி, இன்று
ஆசையே அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று இவ்வுலகம் சொல்லித்தர துணிகிறது.
பேராசையால்
செல்வத்தைக் குவித்து, பின்னர் அச்செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை
சென்ற வாரம் வீட்டுப் பொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறினார். இவ்வுவமையின் இறுதியில்,
'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை
செய்யமுடியாது' (லூக்கா 16: 13)
என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத்
தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்"
(லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.
நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும்
நண்பர்கள் யார்? அவர்கள் எப்போதுமே நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளே என்பதை ஓர் உவமை வழியாக
இயேசு இன்று கூறியுள்ளார். 'செல்வரும் இலாசரும்' என்ற மிகப் புகழ்பெற்ற உவமை இன்றைய நற்செய்தியாக
ஒலிக்கிறது. இவ்வுவமை ஒரு வைரத்தைப்போல் வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இந்த வைரத்தின்
முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், இவ்வுவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச்
செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம். லூக்கா நற்செய்தி 16:19-21 உள்ள முதல் மூன்று
இறைச்சொற்றோடர்களில் இவ்வுவமையின் இரு நாயகர்களை இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக
வரிகளில் செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும்
காணப்படுகின்றன. செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ: • செல்வர் ஒருவர்
இருந்தார். • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார். • நாள் தோறும்
விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ: • இலாசர்
என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. • அவர்
அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார். • செல்வருடைய மேசையிலிருந்து விழும்
துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார். • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
இந்த
எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம்.
பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர்
கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை. இயேசு கூறிய இவ்வரிகளைக்
கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத
இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும்
கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப்
பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இவ்வுவமைக்குரிய தனிச் சிறப்பு. தனித்துவமான இச்சிறப்பு
தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது. செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும்,
வறுமை, ஏழ்மை இவற்றை இறைவனின் சாபமாகவும் எண்ணிவந்த இஸ்ரயேல் மக்களுக்கு, குறிப்பாக,
மதத் தலைவர்களுக்கு, இயேசு ஏழைக்கு கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள்
எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார்.
இந்த உவமையில் ஏழைக்கு இலாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏழைகளைத்
தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டு கண்டனம் சொல்லவேண்டாம். இதே மனநிலைதானே
இன்றும் நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப்பற்றி பேசும்போது, திருவாளர் இவர், திருவாளர்
அவர் என்ற அடைமொழியுடன் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும்போது, பொதுவாக அவர்களை ஓர்
எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். “திருவாளர் மாணிக்க வள்ளலார் அவர்கள் இன்று நடத்திய
தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக்கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பதுதானே நமது பேச்சு வழக்கு?
ஏழைகளை எண்ணிக்கைகளாகக் கணக்கிடாமல், மனிதப் பிறவிகளாக மதிக்கவேண்டும் என்பதற்கு இயேசு
தன் உவமையில் கூறியுள்ள முதல் ஒப்புமை நல்லதொரு பாடம்.
செல்வரையும், இலாசரையும்
குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர்
செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது
என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச்
செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம்.
இலாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார். அரசப் பரம்பரையைக்
குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத்தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில்
செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசாரோ உடலெங்கும் புண்ணாகி,
இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். ‘யூதர்களின் அரசன்’ என்ற அறிக்கையுடன், சிலுவையில்
செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு
அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது இந்த ஒப்புமை.
மூன்றாவது
ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன. • செல்வர்
நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். • இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில்
அருகேக் கிடந்தார். • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற
விரும்பினார். • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
செல்வர் மறுவாழ்வில்
நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர்
செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால்
நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே,
அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது,
அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே...
அதற்காக இத்தண்டனை.
ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப்
பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகள் உதவியுடன், இலாசரைத்
தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் என்று செல்வர் சார்பில் வாதாடத்
தோன்றுகிறது. செல்வர் இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக்
கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன். இலாசர்
மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான
நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்பதையாகிலும்
அச்செல்வர் உணர்ந்திருப்பார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும்
அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது
தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக “இலாசர்
அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20)என்று
இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.
செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்று. தூசி காலடியில்
கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும்.
தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச்
செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில்
காண்கிறோம்.
ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை
ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர்
தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்'(லூக்கா 16: 24)என்று மன்றாடுகிறார். இந்த
வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது நம் சிந்தனைக்குரியது.
வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருக்குமா
என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க
வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில் ஆயிரத்தில்
ஒரு பகுதியை இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது. வான்
வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார்.
நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது
அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால்,
நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது
அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது அவரை ஒரு மனிதப் பிறவியாகக்
கூட மதிக்காமல் செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த
நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு
நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?