2013-09-26 15:39:14

திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'Pacem in Terris' வழியே இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதமான பாடம் - கர்தினால் பீட்டர் டர்க்சன்


செப்.26,2013. போர்ச் சூழலில் அமைதியை எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்விக்குப் பதில் கூறாமல், மனித மாண்பின் அடிப்படையில், இவ்வுலகம் எவ்வாறு நிரந்தர அமைதியைக் காணமுடியும் என்பதே முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதமான பாடம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
1963ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 'உலகில் அமைதி' என்ற மையக் கருத்துடன் வெளியிட்ட 'Pacem in Terris' என்ற புகழ்பெற்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கைக் குறித்து, நீதி அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அக்டோபர் 2ம் தேதி முதல் 4ம் தேதி முடிய நடைபெறவுள்ள இக்கருத்தரங்கின்போது, அமைதியை நிலைநாட்டும் மூன்று வழிகள் குறித்து கருத்தரங்கில் பேசப்படும் என்று கர்தினால் டர்க்சன் விளக்கினார்.
அமைதியை நிலைநாட்ட அரசுகளும் உலக அமைப்புக்களும் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் முதல் கருத்தாகவும், புதிய வழிகளில் அமைதியைக் கொணரும் முயற்சிகளை ஆய்வு செய்வது இரண்டாவது கருத்தாகவும், அமைதியை இன்றைய கல்வித் திட்டங்களின் இன்றியமையாத அங்கமாக்குவது மூன்றாவது கருத்தாகவும் இக்கருத்தரங்கில் அமையும் என்று கர்தினால் டர்க்சன் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.