2013-09-25 16:42:35

இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு


செப்.25,2013. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழ்வுடன் வெகுவாக ஒன்றிப்போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் Twitter. குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும், தமது கருத்துக்களை அவர்கள் Twitter வழியே பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது Twitter போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட சமூக இணையதளங்களில் ஒன்று, சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் Weibo. Twitterக்கு இணையான Weiboவை சீனாவில் 50 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
10 கோடி கருத்துகள் தினமும் பதிவாகும் Weibo இணையதளம் பற்றி, தலைநகர் Beijingகிலுள்ள Beihang பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Weibo பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், உணர்வுகளை வெளிப்படுத்தும் emoticon எனப்படும் அடையாளப் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்கள், கோபம், சோகம், மகிழ்வு, விரக்தி ஆகிய உணர்வுகளில், கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டதைக் கண்டறிந்தனர்.
2010ம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு இலட்சம் Weibo பயனீட்டாளர்களின் ஏழு கோடி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.