கர்தினால் பஞ்ஞாஸ்கோ : உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள்
செப்.,24,2013. நீண்ட காலமாக வன்முறையிலும் அச்சத்திலும் வாழ்ந்துவரும் புனிதபூமி தொடங்கி,
மத்திய கிழக்குப் பகுதி முழுவதுடனும் இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு
கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ. இத்தாலிய
ஆயர் பேரவையின் நிலைத்தகுழு கூட்டத்தை உரோமையில் துவக்கி வைத்து உரையாற்றிய, ஜெனோவா பேராயரான
கர்தினால் பஞ்ஞாஸ்கோ, தற்போதைய இத்தாலியையும், அனைத்துலகையும் பாதித்துள்ள விவகாரங்கள்
குறித்துப் பேசினார். குழுக்களையும், மக்களையும் நஞ்சூட்டியுள்ள தனிமனிதப் போக்கின்
தீமைகளை முதலில் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் பஞ்ஞாஸ்கோ, பாகுபாடு மற்றும் சகிப்பற்றதன்மையின்
வடிவங்களில் அனைத்துலக அளவில் இவற்றை வெளிப்படையாகவும், தொடர்ந்தும் காண முடிகின்றது
என்றும் கூறினார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுடன் தனது மிக நெருக்கமான
ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்
அதிகரித்து வருவதாகவும், இவ்வன்முறைகள் எதுவும் நடக்காததுபோல் உலகம் பாசாங்கு செய்யக்
கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் இடம்பெறும் போரில் ஒரு இலட்சம் பேர்
கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.