கர்தினால் Tagle : நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியும்
செப்.23,2013. பிலிப்பீன்ஸ் நாட்டின் தென் பகுதியில் Zamboangaவில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண முடியும் என்பதில் தலத்திருஅவை முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக
அந்நாட்டு கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார். அமைதியைக் கட்டியெழுப்புவதில்
முயன்றுவரும் Mindanao ஆயர்களுடன் பிலிப்பீன்ஸ் நாட்டின் அனைத்து ஆயர்களும் இணைவதாக உரைத்த
மணிலா கர்தினால் Tagle அவர்கள், தலத்திருஅவை எப்போதும் அமைதிக்காக உழைத்து வருகிறது,
அந்த அமைதியையே பிலிப்பீன்ஸ் மக்களும் விரும்புகின்றனர் என்றார். Mindanao பகுதியில்
ஆயதம் ஏந்திப் போராடும் இரு குழுக்களுள் ஒன்று அமைதி உடன்பாட்டிற்கு இசைந்துள்ளதாகவும்,
ஏனையது அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவருகிறது என்பதையும் தெரிவித்த கர்தினால் Tagle
அவர்கள், மக்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவதையும், அவர்களுக்குத் துன்பங்களை வரவழைப்பதையும்
ஏற்கமுடியாது எனவும் கூறினார்.