செப்டம்பர் 15, சென்ற
ஞாயிறு, துயருறும் அன்னை மரியாவையும் சிரியா நாட்டின் ஆபத்தையும் இணைத்துச் சிந்தித்தோம்.
துயருறும் அன்னை மரியா என்றதும், உருக்குலைந்த மகனை மடியில் கிடத்தி அமர்ந்திருக்கும்
அந்த உருவம் மனதில் ஆழமாய் பதிகிறது. அதே செப்டம்பர் 15ம் தேதியன்று, அனைத்துலக மக்களாட்சி
நாளும் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை அகில உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டது.
மக்களாட்சி, உலக அமைதி என்ற உயர்ந்த இலட்சியங்களை இனி கொண்டாடமுடியுமா என்ற கேள்வி நம்
மனங்களை வாட்டுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குக் காயப்பட்டு, உருக்குலைந்து
கிடக்கும் மக்களாட்சி என்ற மகனை மடியில் ஏந்தி அழுதுகொண்டிருக்கும் பல தாய்நாடுகளை எண்ணி
வேதனைப்படவேண்டிய நாள், அனைத்துலக மக்களாட்சி நாள். ‘மக்களாட்சி’ என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்ட
பல இலக்கணங்களில் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அளித்த இலக்கணம் அதிகப் புகழ்பெற்றது.
மக்களுக்காக,
மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று
லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், அவர் சொன்ன வேறொரு கூற்றும்
உள்ளத்தில் பளிச்சிடுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்: • எல்லா
மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம்.
ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற
முடியாது. • You may fool all the people some of the time, you can even fool
some of the people all of the time, but you cannot fool all of the people all the
time.
ஏமாற்றுவதுபற்றி லிங்கன் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்காவில்
வங்கிகள் தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது, போர்ச் செலவுக்கு
வங்கி உரிமையாளர்களிடம் லிங்கன் பணம் கேட்டார். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு
வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்றுணர்ந்த லிங்கன், பாராளுமன்றத்தின்
அனுமதியுடன் அரசே பண நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றைக்
கொண்டுவந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு அவர் உள்நாட்டுப்
போரின் செலவுகளைச் சமாளித்தார். உள் நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் கொல்லப்பட்டார்.
அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது. இதேபோல், ஜான் கென்னடி அரசுத் தலைவராக
இருந்தபோது, 1963ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையைப் பிறப்பித்தார்.
அதே ஆண்டு நவம்பர் 22ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னடி இருவரின்
கொலைகளுக்கும் தெளிவான முடிவுகள் இதுவரைத் தெரியவில்லை. இவர்களது கொலைகளுக்கும் பணம்
படைத்த வங்கியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது வரலாற்றில் அவ்வப்போது அதிக சப்தமில்லாமல்
பரிமாறப்படும் கருத்துக்கள். இவ்விரு எடுத்துக்காட்டுகளும் Tip of the iceberg என்று
சொல்லப்படும் பனிப் பாறையின் மேல் நுனிதான். பணம் அல்லது செல்வம் என்ற பனிப்பாறையில்,
தெரிந்தும், தெரியாமலும் மோதி, பல நாடுகள் கடன் என்ற கடலில் மூழ்கி வருவது இன்றைய அவலநிலை. இன்று
உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் பண சக்தியைப்
பற்றி இன்று நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். தீவிரமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறும் திட்டவட்டமான சொற்கள் நம்மைத் விழித்தெழச்
செய்கின்றன: "நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும்
பணிவிடை செய்யமுடியாது" (லூக்கா 16: 13)
இயேசுவின் இந்தக் கூற்று
நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராததுபோல் தெரிகிறது. செல்வம் இன்றி, பணம் இன்றி வாழமுடியுமா
என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. கடவுளையும் செல்வத்தையும் எதிரும் புதிருமாக அமைத்து,
இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ள, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 13ம் இறைச்
சொற்றொடர் முழுவதையும் சிந்திப்பது உதவியாக இருக்கும். லூக்கா 16: 13 "எந்த
வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில்,
ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது
ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும்
பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறியுள்ளார்.
பணமின்றி, செல்வமின்றி
வாழ்க்கை நடத்துங்கள் என்றோ, செல்வத்தைத் துறந்துவிட்டு கடவுளுக்குப் பணிவிடை செய்யுங்கள்
என்றோ இயேசு கூறவில்லை. கடவுளுக்கும் செல்வத்துக்கும் சமமான இடத்தைக் கொடுப்பதில்தான்
பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒருவருடைய வாழ்வில் எப்போது அவர் சேர்த்த செல்வம், இறைவனுக்குப்
போட்டியாக எழுகிறதோ, அப்போது போராட்டம் துவங்குகிறது. இறைவனா, செல்வமா என்ற இந்தப் போட்டியில்,
கண்ணால் காண முடியாத இறைவனைவிட, கண்ணால் காணக்கூடியச் செல்வத்தை நாம் எளிதில் பீடமேற்றிவிடுகிறோம். இன்றைய
உலகில் செல்வம் எந்தெந்த வழிகளில் பீடமேற்றப்பட்டு வணங்கப்படுகிறது என்பதை எண்ணும்போது
அதிர்ச்சியாக உள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் என்ற பதவி உலகிலேயே மிகப் பெரும் பதவி என்று
எண்ணுவோர், ஆபிரகாம் லிங்கனையும், ஜான் கென்னடியையும் சிறிது எண்ணிப் பார்க்கவேண்டும்.
அத்தனை அதிகாரங்களும் கொண்ட அவர்களே பணம் படைத்த செல்வந்தர்களை எதிர்த்ததால் பலியாயினர்.
அவர்கள் கொலை செய்யப்பட்டதன் முழு உண்மைகளும் இதுவரை வெளிவராமல் இருப்பதற்குக் காரணம்...
பின்னணியில் இருக்கும் செல்வம் படைத்தவர்களே! அமெரிக்க அரசுத் தலைவர்கள் பலர் ஆட்சிப்பீடத்தில்
அமர்வது உண்மை. ஆனால், அவர்களை ஆட்டிப் படைப்பவர்கள், பணத்தைப் பீடமேற்றித் தொழுதுவரும்
செல்வர்களே என்பதில் ஐயமில்லை.
செல்வர்கள் ஒருசிலர் இவ்வுலகை எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றனர்
என்பதை John Perkins என்பவர் ஒரு நூலில் எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான இந்நூலின்
தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது: Confessions of an Economic Hit Man - அதாவது,
'பொருளாதாரம் கொண்டு கொலைசெய்த ஒருவரின் பாவ அறிக்கை' என்பது இந்நூலின் தலைப்பு. இந்நூலில்
அவர் கூறுவதெல்லாம் இதுதான்... அமெரிக்காவை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சியில் இருப்போரை
ஆட்டிப் படைப்பதெல்லாம் செல்வம் படைத்த ஒரு சிலரே. இச்செல்வர்கள் தங்கள் நாட்டில் வளர்த்துள்ள
வர்த்தகம் போதாதென்று, அடுத்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தால், அதற்கு அமெரிக்க அரசும்
துணைபோக வேண்டும். அமெரிக்க அரசுத் தலைவருக்கே இந்நிலை என்றால், ஏனைய நாடுகளைப் பற்றி
சொல்லவும் வேண்டுமா?
செல்வர்கள் அடுத்த நாட்டுக்குள் காலடி வைக்க எடுக்கும் முயற்சிகளை
John Perkins தான் அளித்த பேட்டியொன்றில் படிப்படியாக விவரித்துள்ளார். பணத்தைக் காட்டி
அடுத்த நாட்டுத் தலைவர்களை விலைபேசும் முயற்சிகள் முதலில் நடைபெறும். இலத்தீன் அமெரிக்காவின்
பல நாடுகளில் இவ்வித முயற்சிகளில் ஈடுபட ‘பொருளாதார ஆலோசகர்’ என்ற பெயரில் தான் சென்றதாக
Perkins கூறியுள்ளார். இந்த முயற்சி தோற்றுப்போனால், மக்களின் போராட்டம் என்ற பெயரில்
அந்நாட்டில் குழப்பங்களை உருவாக்கி, அங்கு அமெரிக்க அரசின் இராணுவத் தலையீடு இருக்கும்படி
செய்வது அடுத்தக் கட்டம் என்று Perkins கூறியுள்ளார். அண்மையில் சிரியாவில் அமெரிக்க
இராணுவம் நுழைய முற்பட்டதும் இத்தகையதொரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்விதம்
செல்வர்கள் பல நாடுகளில் உருவாக்கியுள்ள, இன்னும் உருவாக்கிவரும் அழிவுகளைப் பற்றி John
Perkins பேசுவதைக் கேட்கும்போது, மனம் அதிர்ச்சியுறுகிறது. செல்வம் மிகுந்த நாடுகளில்
வாழும் செல்வர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு, இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அரபு நாடுகளில்,
ஆசிய நாடுகளில் புகுந்துள்ளதை நாம் உணர முடிகிறது. இவ்விதம் வெளிநாட்டிலிருந்து வந்துதான்
ஒரு நாட்டின் மக்களாட்சியையோ அல்லது அந்நாட்டின் இயற்கை வளங்களையோ அழிக்கவேண்டும் என்பது
கட்டாயமில்லை. நாட்டுக்குள் வாழும் செல்வர்களே இந்த அழிவை உருவாக்குவதை ஒவ்வொரு நாட்டிலும்
நாம் காணலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், செல்வர்கள் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர்
எனபதற்கு அனைத்து நாடுகளும் எடுத்துக்காட்டுகள். இவ்விதம் செல்வர்கள் சக்தி பெறுவதற்கு
அவர்கள் திரட்டியிருக்கும், அவர்கள் பீடமேற்றி தொழுதுவரும் செல்வமே முக்கியக் காரணம்.
ஒருவகையில் பார்த்தால், நாடுகளை ஆட்டிப்படைக்கும் செல்வர்களை, நாளெல்லாம் ஆட்டிப்படைப்பது
அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வம்.
தங்களை ஆட்டிப்படைக்கும், அல்லது தாங்கள்
வழிபடும் இந்தச் செல்வத்திற்காக, இவர்கள் மேற்கொள்ளும் சுயநலத் திட்டங்கள் கண்கட்டி
வித்தைகளைப் போல் தெரிகின்றன. வெளிப்படையாக அரசியலில் இறங்கினால் மக்களுக்குப் பணியாற்ற
வேண்டும் என்பதை அறிந்து, மறைவில் இருந்தபடியே மற்றவர்களை அரசியலில் புகுத்தி, அவர்களைத்
தங்கள் கைபொம்மைகளாக இயக்கி வருகின்றனர் செல்வர்கள். பேராசையில் வாழும் செல்வர்கள்,
அனைத்தையும், அனைவரையும் தாங்கள் வழிபடும் செல்வத்திற்குப் பலியாக்குவது தொன்றுதொட்டு
மனித வரலாற்றில் நிகழ்ந்துவரும் ஒரு சாபம்தான். இறைவாக்கினர் ஆமோஸ் காலத்தில் வாழ்ந்த
செல்வர்களும் இறைவனைவிட செல்வத்திற்கு மதிப்பு அளித்ததால், அவர்களுக்கு ஒய்வு நாளும்
ஒரு பெரும் சுமையாக மாறியது. இதோ இறைவாக்கினர் ஆமோஸ் இச்செல்வர்களைப் பார்த்து விடுக்கும்
எச்சரிக்கை: ஆமோஸ் 8: 4-7 வறியோரை நசுக்கி, நாட்டில்
உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்?
கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்?
மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி,
கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்:வெள்ளிக்காசுக்கு
ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று
நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின்
பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான்
ஒருபோதும் மறக்கமாட்டேன்.
இவ்விதம் உலகெங்கும் நிறைந்திருக்கும் ஒரு சில
செல்வர்களின் சக்தியால், அவர்கள் வழிபடும் செல்வத்தின் சக்தியால், இன்று உலக அரசுகள்,
அகில உலக அமைப்புக்கள் சக்தி இழந்து வருகின்றன. அண்மையில் சிரியா மீது இராணுவத் தாக்குதல்
மேற்கொள்ள அமெரிக்க அரசு முடிவெடுத்தபோது, அந்த முடிவுக்குப் பின்னணியில் பல செல்வர்களின்
தூண்டுதல் இருந்ததென்பதை பல விவாதங்களில் நாம் கண்டோம். ஐ.நா.வின் கருத்துக்களையும்
செவிகொடுக்காமல் அமெரிக்க அரசும், பிரெஞ்ச் அரசும் விடுத்த அறிவிப்புகள் மீண்டும் ஓர்
உலகப் போரை உருவாக்குமோ என்ற பயத்தை வளர்த்தது. சிரியாவைத் தாண்டி வேறு நாடுகளின்மீது
இச்செல்வர்களின் பேராசைப் பார்வை திரும்பியதால், சிரியாவை ஒரு பகடைக் காயாக மட்டுமே பயன்படுத்தும்
முயற்சியாக, வேதிப் பொருள்களின் பயன்பாடு என்ற குற்றச்சாட்டும், அதைத் தொடரும் தாக்குதலும்
திட்டமிடப்பட்டன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வளவு ஆழமாக நாம் ஞாயிறு
சிந்தனையில் உலக அரசியலைப் பேசவேண்டுமா என்ற கேள்வி எழலாம். கடவுளையும் செல்வத்தையும்
இயேசு இணைத்துப் பேசும்போது, இச்செல்வத்தின் பல வடிவங்கள் கடவுளை இன்று விலைபேசும் அளவு
பெருகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த முயற்சி!
என்னைப் பொருத்தவரை இந்த
ஆபத்திலிருந்து நம்மை ஓரளவு காத்தது, செப்டம்பர் 7ம் தேதியன்று, உலகெங்கும் மக்கள் மேற்கொண்ட
உண்ணாநோன்பும் செபங்களுமே! மதம் என்ற எல்லையைக் கடந்து நாம் இறைவனை நாடிச்சென்றது ஏதோ
ஒரு வகையில் தீர்வைத் தந்துள்ளது. செல்வர்களின் பேராசையால் உந்தித்தள்ளப்பட்டு செயலாற்றும்
அரசுகள் ஒருபுறம், இறைவனை நாடிச்சென்ற உள்ளங்கள் மறுபுறம் என்று நாம் இரு வாரங்களுக்கு
முன் கண்ட அந்த நிலை மீண்டும் இயேசுவின் கூற்றை நினைவுறுத்துகிறது. "நீங்கள் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது." கடவுளும் செல்வமும் மேற்கொண்ட இந்த
மோதலில் கடவுள் வென்றது நிம்மதியைத் தருகிறது.இந்த நிம்மதி தொடரவேண்டுமெனில், பீடமேற்றி
வணங்கப்படும் செல்வம் பீடத்தை விட்டு நீக்கப்படவேண்டும். நாம் உருவாக்கிய செல்வங்கள்
நம்மை ஆட்டிப்படைக்கும் கடவுளாக மாறியுள்ள மயக்கத்திலிருந்து இவ்வுலகம் மீளவேண்டும்.
இத்தகைய விண்ணப்பங்களை இறைவனிடம் இன்று நம்பிக்கையோடு ஏந்திச் செல்வோம்.