மெக்சிகோ புயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி
செப்.19,2013. கடந்த சில நாட்களாக மெக்சிகோவில் வீசிவரும் புயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு
தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார். திருத்தந்தையின்
சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள், மெக்சிகோ ஆயர்கள்
பேரவையின் தலைவர் கரத்தினால் José Francisco Robles Ortega அவர்களுக்கு அனுப்பியுள்ள
இத்தந்தியில், புயலால் உயிரிழந்தவர்களுக்கு தன் செபங்களையும், உறவுகளையும் உடைமைகளையும்
இழந்தோருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. "Ingrid" மற்றும் "Manuel"
என்ற இரு புயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்கியதால், இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
என்றும், மேலும் 58 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இவ்விரு
புயல்களால் பாதிக்கப்பட்டோரையும், துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்போரையும் Guadalupe
அன்னைமரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் செபங்களையும்,
ஆசீரையும் அனுப்புவதாகவும் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.