2013-09-17 16:45:03

கியூபா ஆயர்கள்: நல்லதொரு வருங்காலம் குறித்தநம்பிக்கையுடன் செயல்படுங்கள்


செப்.17,2013. நல்லதொரு வருங்காலம் குறித்த கண்ணோட்டத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு கியூபா நாட்டு மக்களனைவருக்கும் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போது கியூபாவில் நல்லதொரு மாற்றத்தைக் காணமுடிகின்றது என்ற ஆயர்கள், இன்றைய இளையோரில் வருங்காலம் குறித்த நம்பிக்கை நிறையவே உள்ளது என தெரிவித்தனர்.
திருஅவையில் சிறப்பிக்கப்படும் விசுவாச ஆண்டு குறித்து 'நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை' என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று மேய்ப்புப்பணி சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார உண்மைநிலைகளை உணர்ந்தவர்களாக நற்செய்தியை எடுத்துரைக்கவேண்டிய அர்ப்பணத்தை ஒவ்வொருவரும் கொண்டிருக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கான சிறந்த வாழ்வை நாம் அமைத்துக் கொடுக்கமுடியும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றுமடலில் ஊக்கமளித்துள்ளனர் கியூபா ஆயர்கள்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.