ஆயுத விற்பனையைக் குறித்து திருத்தந்தை சங்கடமான கேள்வியை எழுப்பியுள்ளார் - பேராயர்
சில்வானோ தொமாசி
செப்.11,2013. உலகில் இன்று உருவாகும் மோதல்கள் தகுந்த காரணங்களுடன் மேற்கொள்ளப்படும்
போராட்டங்களா அல்லது, ஆயுத விற்பனையை வளர்க்கும் முயற்சிகளா என்ற சங்கடமான கேள்வியை,
திருத்தந்தை எழுப்பியுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஜெனீவாவில்
உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளராக பணியாற்றும்
பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு
கூறினார். கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் உலக அமைதிக்கென மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளில், ஆயுத விற்பனை என்ற கவலைதரும் போக்கினைக் குறித்து ஆழ்ந்த கேள்விகளை திருத்தந்தை
எழுப்பியுள்ளார் என்று பேராயர் தொமாசி கூறினார். கடந்த ஆண்டு மட்டும் உலகில் விற்பனையான
ஆயுதங்களின் மதிப்பு 1,75,000 கோடி டாலர்கள் என்று குறிப்பிட்ட பேராயர் தொமாசி, அதிர்ச்சியூட்டும்
இந்த அளவு பணம் மக்களின் வறுமையைத் துடைக்கும் முயற்சிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால்,
எத்தனையோ போர்களை நாம் நிறுத்தியிருக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.