மனித உரிமைகளும் மத விடுதலையும் நீடித்த அமைதிக்கு இன்றியமையாத கூறுகள்
செப்.10,2013. மனித உரிமைகளும் மத விடுதலையும் நீடித்த அமைதிக்கு இன்றியமையாத கூறுகள்
என்றார் அமெரிக்க கர்தினால் Theodore McCarrick. அண்மையில் ஜோர்டன் நாட்டில் பயணம்
மேற்கொண்டு திரும்பிய வாஷிங்டனின் முன்னாள் பேராயர் கர்தினால் McCarrick, மத்தியக்கிழக்குப்பகுதியில்
நீடித்த அமைதி உடன்பாடு இடம்பெற வேண்டுமெனில் மனித உரிமைகள், மதச் சுதந்திரம், எருசலேம்
குறித்த உடன்பாடு, அமைதிப்பாதையை ஏற்றுக்கொள்ளல் போன்றவை முக்கியமானவை என்றார். அமைதியை
உறுதிப்படுத்தும் பாதையில் மதச் சுதந்திரம் குறித்த கேள்வி முக்கிய இடம் வகிக்கிறது எனவும்
கூறினார் கர்தினால் McCarrick. மத்தியக்கிழக்குப்பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்
குறைந்து வருவது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும் என்ற கர்தினால் McCarrick, 2003ம்
ஆண்டின் போருக்கு முன்னர் இராக்கில் 9 இலட்சத்து 50 ஆயிரமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை,
தற்போது 2 இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.