செப்.10,2013. அச்சமோ, வெட்கமோ, வெற்றி ஆர்ப்பரிப்போ இன்றி கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்
என கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய்க்கிழமை
காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை,
உயிர்ப்பின்றி கிறிஸ்தவனாக மாறுவதில் இருக்கும் ஆபத்து குறித்து எடுத்துரைத்ததுடன், கிறிஸ்துவே
எப்போதும் நம் வாழ்வு மற்றும் நம்பிக்கையின் மையமாக இருக்கிறார் என்பதையும் வலியுறுத்தினார்.
பாவத்தையும் மரணத்தையும் வென்ற கிறிஸ்துவே வெற்றியாளர், என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவை
அறிவிப்பதில் அச்சம் கொள்வோர், வெட்கப்படுவோர், உயிர்ப்பு குறித்து நம்பாமல் வெறும் வெற்றி
ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவோர் ஆகியோர், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திக்காதவர்கள் என்றார்.
ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இயேசுவே அனைத்தும், அவரே முழுமை, அவரே நம்பிக்கை, அவரே
வெற்றியாளர் என மேலும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.