திருத்தந்தை : இவ்வுலகின் தவறான கொள்கைகள் குறித்து கவனமுடன் செயல்படுங்கள்
செப்.,05, 2013. தங்களின் துவக்க கால தனிவரத்தைத் தொடர்ந்து பின்பற்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன்
கார்மல் துறவு சபையினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கார்மல்
துறவுசபையின் பொதுப் பேரவைக்கு ஊக்கவார்த்தைகளுடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை,
கிறிஸ்துவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவரை மறுதலித்து வாழும் இன்றைய சமூகத்தில்,
அவரோடு ஒன்றிணைந்து வாழ நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய
நவீன உலகில் மறைந்திருக்கும் அபாயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வுலகின்
தவறான கொள்கைகள் குறித்து கவனமுடன் செயல்படுமாறு விண்ணப்பித்துள்ளார். உலக அளவுகோல்களின்படியல்ல,
மாறாக, இயேசுவின் போதனைகளின்படி வாழும்போது, ஏராளமான சவால்களை நாம் எதிர்நோக்கவேண்டியிருக்கும்
என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இயேசுவுக்குச் சாட்சியம் பகர நாம் மரணத்தையும்
ஏற்கத் தயாராக இருக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.