சிரியாவின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்தப்பட முடியாதது, இயேசுசபைத்
தலைவர்
செப்.,05, 2013. சிரியாவின்மீது ஆயுதத் தாக்குதலை நடத்துவது என்பது அதிகாரத்தை தவறாகப்
பயன்படுத்துவதாகும் எனக் கூறியுள்ளார் இயேசுசபைத் தலைவர் அருள்பணி அடோல்ஃபோ நிக்கொலாஸ். சிரியா
மீதான எந்தவொரு வெளிநாட்டுத் தாக்குதலும், அப்பாவி மக்களின் துன்பங்களை அதிகரிக்கவே உதவும்
என்ற இயேசுசபைத் தலைவர் அருள்பணி நிக்கொலாஸ், இத்தகைய தாக்குதலை நடத்த அமெரிக்க ஐக்கிய
நாட்டிற்கோ பிரான்சிற்கோ எவரும் அதிகாரம் தரவில்லை என்றார். பலவீனமான நாடுகளை, வலிமை
மிகுந்தோர் தாக்குவது என்பது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்ற அவர், வேதிய
ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து போதிய தகவல்கள், ஆதாரங்கள்
கிட்டாத நிலையில், அதற்கான தண்டனை நடவடிக்கை நியாயமற்றதே எனவும் கூறியுள்ளார்.