செப்.,03,2013. ஒருவரின் வறுமை அவரின் மூளைத்திறனைப் பாதிப்பதாக இந்தியாவிலும் அமெரிக்க
ஐக்கிய நாட்டிலும் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா,
பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவினர், தங்களின் ஆய்வின் ஒரு பகுதியாக
இந்தியாவில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் இதழில் தங்களின் ஆய்வின்
முடிவுகளை வெளியிட்டுள்ளனர். விவசாயிகளின் வருமானங்களுக்கு ஏற்ப அவர்களின் மூளைச்
செயற்பாடுகள் மாறுபட்டிருந்ததை உறுதிசெய்துள்ளதாக பிரிட்டனின் Warwick பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த மருத்துவர் ஆனந்தி மணி கூறினார். கையில் பணம் இருந்த காலப்பகுதியில் நுண்ணறிவுத்
திறன் பரிசோதனைகளில் விவசாயிகள் திறமைசாலிகளாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.