2013-09-03 16:04:13

திருத்தந்தை பிரான்சிஸ் : தீமையை வெல்வதற்கு இயேசுவுக்கு இராணுவங்கள் தேவையில்லை


செப்.,03,2013. இயேசு இருக்குமிடத்தில் எப்பொழுதும் தாழ்மையும் பணிவும் அன்பும் இருக்கும் என்று வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் இதயங்களில் பேசும் இயேசுவின் ‘அமைதி ஒளிக்கும்’, நம்மை தற்பெருமையும் வீம்பும் உடையவர்களாக ஆக்கும் இவ்வுலகின் ‘செயற்கை ஒளிக்கும்’ இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து இத்திருப்பலி மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ தனித்தன்மை என்பது, இருளின் தனித்தன்மை அல்ல, ஆனால் அது ஒளியின் தனித்தன்மை என்றும், கிறிஸ்துவின் ஒளி, ஞானத்தின் ஒளி, அமைதியின் ஒளி, தாழ்மையின் ஒளி, இந்த ஒளி நமக்கு அமைதியை அளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
எனவே உண்மையான இயேசுவை அச்சமின்றி பின்பற்ற வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளின் நற்செய்தியில் இயேசு தீய ஆவியை விரட்டியது பற்றி விளக்கப்பட்டுள்ளது, தீய ஆவிகளை விரட்டுவதற்கு இயேசுவுக்கு இராணுவம் தேவையில்லை என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.