மனிதரின் சிறுநீரகங்கள், நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 1,500 லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன.
உடலில் நீர், தாது உப்புக்களின் அளவு அதிகரிக்கும்போது, அதனை வெளியேற்றும் பணியை இவை
சிறப்பாகச் செய்கின்றன. சிறுநீரகத்தின் திறன் மிகவும் குறைந்து, இரத்தத்தில் உள்ள நச்சுக்களைப்
பிரித்து வெளியேற்றும் திறன் பாதிக்கப்படும்போது டயாலிசிஸ் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பெரிட்டோனியல் டயாலிசிஸ், ஹிமோடயாலிசிஸ் என இரண்டு வகை டயாலிசிஸ் முறைகள் உள்ளன. இவை
இரண்டுமே உடலில் உள்ள நீர், உப்பு மற்றும் நச்சுக்களைப் பிரித்து வெளியேற்றுகின்றன. பெரிட்டோனியல்
டயாலிசிஸ் என்பது, நம் வயிற்றுப் பகுதியில் உள்ள பெரிட்டோனியம் என்ற மெல்லிய சவ்வைப்
பயன்படுத்தி கழிவுகள் அகற்றப்படும் முறை. இதை வீட்டிலேயேகூட செய்யலாம். இந்த முறையில்,
வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் டியூப் பொருத்தப்படும். இதன்வழியே வயிற்றுக்குள் உள்ள
'அப்டாமினல் கேவிட்டி’ என்ற பகுதிக்குள் பிரத்யேகமான டயாலிசிஸ் திரவம் செலுத்தப்படும்.
இதன் சுவர்ப் பகுதியான பெரிட்டோனியம் சவ்வு இப்போது வடிகட்டியாகச் செயல்படும். இதன் வழியாக
இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலெட், யூரியா, கிரியாட்டின், அல்புமின் போன்றவை ஈர்க்கப்பட்டு,
டயாலிசிஸ் திரவத்துக்குள் வந்துசேரும். இதை இரவு நேரத்தில் நோயாளி தூங்கும்போதுகூட செய்யலாம். ஹிமோடயாலிசிஸ்
என்பதை செயற்கை சிறுநீரகம் என்றே கூறலாம். நம்முடைய இரத்தமானது வெளியில் உள்ள கருவிக்குள்
செலுத்தப்படும். இந்தக் கருவியினுள் பிரத்யேகமான வடிகட்டி உள்ளது. கையில் உள்ள 'சிறை’
இரத்த நாளத்தில் சிறிய குழாய் ஒன்று செருகப்படும். மற்றொரு முனையானது இந்தக் கருவியினுள்
இருக்கும். இந்தக் குழாய் வழியாக வரும் இரத்தமானது, கருவியினுள் உள்ள வடிகட்டியினுள்
பாய்ந்து வடிகட்டப்படும். இந்த தூய இரத்தமானது மற்றொரு குழாய் வழியாக 'தமனி’ இரத்தக்
குழாயின் மூலம் உடலுக்குள் செலுத்தப்படும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால்
போதும். இதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும் . சிறுநீரகப் பிரச்சனையைத் தவிர்க்க... சர்க்கரை,
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை வலி நிவாரண
மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கிச்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் நீர்
அருந்த வேண்டும். உணவில் காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில்
உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.