கர்தினால் Tauran : மத்திய கிழக்கில் மதங்கள் மத்தியில் அமைதி இயலக்கூடியதே
ஆக.,30,2013. அண்மை வாரங்கள் மற்றும் மாதங்களாக பல்வேறு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள
மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடிநிலைகளுக்கு மதம் காரணமல்ல என்று திருப்பீட பல்சமய
உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார். ஒரே கடவுள் கொள்கையுடைய
மூன்று மதங்களும் வாழும் மத்திய கிழக்குப் பகுதியின் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு
மதங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் கூறினார் கர்தினால்
Tauran. மதம், ஆன்மீகம் சார்ந்தது என்பதோடுமட்டும் நிறுத்திவிடாமல் அதனை அரசியலோடு
கலக்கும்போது பிரச்சனை உருவாகின்றது என்றுரைத்த கர்தினால் Tauran, தங்களின் மத வேறுபாடுகளுக்கு
மத்தியில் பிற மதங்களை மதித்து அமைதியிலும் உரையாடலிலும் வாழ்வதற்கு இளையோர்க்குக் கற்றுக்கொடுக்கப்பட
வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். லெபனன் நாட்டில் 1979ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டுவரை
திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ள கர்தினால் Tauran, 1986ம் ஆண்டில் பெய்ரூட் மற்றும்
தமாஸ்கு நகரங்களில் சிறப்புப் பணிகளிலும் பங்கெடுத்தவர்.