2013-08-29 15:26:24

திருத்தந்தை பிரான்சிஸ் : புனித அகுஸ்தீன் போன்று கிறிஸ்தவர்களும் ஓய்வற்ற இதயங்களைக் கொண்டிருக்க வேண்டும்


ஆக.,29,2013. மனிதர்களின் இதயங்கள் இறைவனில் இளைப்பாறும்வரை அவை அமைதியடைவதில்லை என்று புனித அகுஸ்தீன் பெருமையுடன் சொன்னார், ஆனால் இன்று பலர், தங்களின் இதயங்களை ஒருவித மயக்கநிலைக்கு உள்ளாக்கி இறைவனையும் அன்பையும் அவர்கள் தேடுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் தலைமை ஆலயமான உரோம் புனித அகுஸ்தீன் பசிலிக்காவில் இப்புதன் மாலை திருப்பலி நிகழ்த்தி அச்சபையினரின் 184வது பொதுப்பேரவையை ஆரம்பித்து வைத்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அகுஸ்தீன் திருவிழாவான இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையில், புனித அகுஸ்தீன் சபையினர் இறைவனைத் தேடுவதிலும், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து, அன்பை வெளிப்படுத்துவதற்கான ஆவலிலும் எப்பொழுதும் ஓய்வின்றிச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆன்மீக வாழ்விலும், இறைவனைத் தேடுவதிலும், பிறரன்பிலும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஓய்வின்றி இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
புனித அகுஸ்தீன் அவர்களின் வாழ்க்கை பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், தங்களின் இதயம் பெரிய காரியங்களை விரும்புகின்றதா அல்லது அது தூங்கிக்கொண்டிருக்கின்றதா என்பது குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களையே கேள்வி கேட்க வேண்டுமென்றும் கூறினார்.
1244ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனித அகுஸ்தீன் துறவு சபையின் 184வது பொதுப்பேரவையில் 90 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகங்கள் வாழ்ந்த வாழ்வை வாழ்ந்து அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் இத்துறவு சபை தொடங்கப்பட்டது. தற்போது இச்சபையினர் 5 கண்டங்களின் 50 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.