2013-08-29 15:29:10

திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்புக்கு இயேசு கிறிஸ்து என்ற பெயரும் முகமும் உண்டு


ஆக.,29,2013. இறையன்பு ஏதோ தெளிவற்ற அல்லது பொதுப்படையான ஒன்று அல்ல; மாறாக, இறையன்புக்கு, இயேசு கிறிஸ்து என்ற பெயரும் முகமும் உண்டு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் மிலானில் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நடைபெற்றுவரும் கருத்தரங்கு ஒன்றிற்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கி.பி.313ம் ஆண்டில் உரோமைப் பேரரசர் Constantine கிறிஸ்தவத்துக்கு மனம்மாறி, உரோமைப் பேரரசு முழுவதும் மதசுதந்திரத்தை அறிவித்ததன் 1700ம் ஆண்டை சிறப்பிக்கும்விதமாக இக்கருத்தரங்கு நடைபெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மனித சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உரோம் அந்தோணியானம் பாப்பிறைப் பல்கலைக்கழகமும், கிரீஸ் நாட்டின் Saloniccoவின் Aristoteles பல்கலைக்கழக்த்தின் ஆர்த்தடாக்ஸ் இறையியல் துறையும் இணைந்து மிலானின் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் நடத்திவரும் இக்கருத்தரங்கு இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.