ஆக.,29,2013. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அனைத்துலக சமுதாயத்தின்
ஆதரவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே ஒரே தீர்வு என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,
ஜோர்டன் அரசரும் இவ்வியாழனன்று கூறினர். ஜோர்டன் அரசர் Abdullah Husayn, அரசி Rania
ஆகிய இருவரும் இவ்வியாழனன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடத்திய
20 நிமிடச் சந்திப்பின்போது சிரியா பற்றிய இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே,
நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்
ஜோர்டன் அரசர் Abdullah. மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடிநிலை குறித்து இடம்பெற்ற
கருத்துப் பரிமாற்றங்களில், ஒவ்வொரு நாளும் பல அப்பாவி மக்கள் உயிரிழப்பது குறித்த கவலையும்
தெரிவிக்கப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. இச்சந்திப்பு, ஜோர்டன்
அரசருக்கும், திருத்தந்தைக்கும் இடையே வத்திக்கானில் நடைபெற்ற முதல் சந்திப்பாகும். முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2009ம் ஆண்டில் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது
அரசர் Abdullah, Ammanல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.