2013-08-24 15:50:16

அர்ஜென்டினா அருள்பணியாளர் : கர்தினால் பெர்கோலியோ, திருத்தந்தையான பின்னும் எவ்வித மாற்றமும் இல்லை


ஆக.,24,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது அவரின் அணுகுமுறை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே அவர் திருத்தந்தையானபின்னரும் இருக்கின்றது என்று அர்ஜென்டினா தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் ரிமினி நகரில் நடைபெற்ற கூட்டத்தின் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த அருள்பணி José Maria di Paola, கர்தினால் கோர்கே மாரியோ பெர்கோலியோ Buenos Airesல் செய்த பணிகளை இப்போது திருத்தந்தையாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்ணோட்டத்திலும், மக்களோடு அவர் கொள்ளும் உறவிலும் இப்போது எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என்றும், அவர் Buenos Aires பேராயராக இருந்தபோது எவ்வாறு செயலாற்றினாரோ அவ்வாறே இப்போதும் செயல்புரிகின்றார் என்றும் அருள்பணி di Paola கூறினார்.
அர்ஜென்டினாவில் முப்பது ஆண்டுகள் அருள்பணியாளராகப் பணியாற்றி வரும் அருள்பணி di Paola தனது வாழ்வின் பெரும்பகுதியை Buenos Aires மாநகரின் சேரி மக்களுக்குச் சேவை செய்வதில் செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருள்பணி di Paola, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.