2013-08-23 15:22:51

வத்திக்கான் : மனித வியாபாரம், நவீன அடிமைத்தனம் குறித்தப் பரிசீலனைக் கூட்டம்


ஆக.,23,2013. உலக அளவில் அதிகரித்துவரும் மனித வியாபாரம் மற்றும் நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்குச் சிறந்த வழிமுறைகளை ஆய்வு செய்யும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் வத்திக்கான் வல்லுனர்கள் வருகிற நவம்பரில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இக்கூட்டம் குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, திருப்பீட சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் ஆயர் Marcelo Sánchez Sorondo, இக்காலச் சமூகத்தை மிகவும் பாதித்துள்ள மனித-வியாபாரச் சீர்கேட்டை கத்தோலிக்க நிறுவனங்களால் ஒழிக்க முடியும் என்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
உலக அளவில் அதிகரித்துவரும் மனித வியாபாரக் குற்றத்தை இரண்டாயிரமாம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உணர ஆரம்பித்தது என்றும் கூறினார் ஆயர் Sánchez Sorondo.
திருப்பீட சமூக அறிவியல் கழகமும், கத்தோலிக்க மருத்துவக் கழகங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பும் இணைந்து வருகிற நவம்பர் 2,3 தேதிகளில் வத்திக்கானில் இக்கூட்டத்தை நடத்தவுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 90 இலட்சம் பேர் மனித வியாபாரக் குற்றத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், உலகில் ஆண்டுதோறும் பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படும் ஏறக்குறைய 20 இலட்சம் பேரில் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்று மனித வியாபாரம் குறித்த ஐ.நா. அலுவலகத்தின் 2012ம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.