2013-08-23 15:30:04

முதுபெரும் தந்தை Raï: மத்திய கிழக்கில் இடம்பெறும் சண்டையில் கிறிஸ்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்


ஆக.,23,2013. மத்திய கிழக்குப் பகுதியின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகின்றது என்று அந்தியோக்கியாவின் மாரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Raï கூறினார்.
மத்திய கிழக்கின் இன்றையநிலை குறித்து இவ்வெள்ளியன்று வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Raï, எகிப்தில், சிரியாவில், ஈராக்கில் என இக்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் சண்டைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஈராக்கிலும், சிரியாவிலும் சுன்னி மற்றும் ஷியைய்ட் இஸ்லாம் மதப் பிரிவுகளுக்கு இடையேயும், எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கும் மிதவாத முஸ்லீம்களுக்கும் இடையேயும் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன, ஆயினும் இச்சண்டைகள் மேலும் தீவிரமடைவதற்கு முக்கியமாக மேற்கத்திய நாடுகள் காரணம் என்று தெரிவித்தார் கர்தினால் Raï.
இச்சண்டைகளுக்கு கிழக்கத்திய நாடுகளும் காரணம் என்று தெரிவித்த கர்தினால் Raï, இப்பகுதிகளில் 1400 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், இங்கு மனித, ஒழுக்க மதிப்பீடுகள் வளரக் கிறிஸ்தவர்கள் ஒரு பிணைப்பாக இருந்துள்ளனர் என்றும் கூறினார்.
1400 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் கட்டியெழுப்பிய அனைத்தும் இக்காலத்தில் நடைபெறும் சண்டைகளால் அழிந்து வருகின்றன, முஸ்லீம்களுக்கு இடையே இடம்பெறும் இச்சண்டைகளுக்கு கிறிஸ்தவர்கள் பலிகடா ஆகின்றனர் என்று கவலை தெரிவித்தார் கர்தினால் Raï.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.