டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எங்களைவிட்டு வெளியே வர எமக்குக் கற்பித்தருளும்
ஆக.,23,2013. ஆண்டவரே, நாங்கள் எங்களைவிட்டு வெளியே வரவும், நாங்கள் தெருக்களுக்குச்
சென்று உமது அன்பை வெளிப்படுத்தவும் எமக்குக் கற்றுத்தாரும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில்
இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியம், இலத்தீன்,
ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய
ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ்,
நாம் ஒவ்வொருவரும் நமது சுயத்தைவிட்டு வெளியே வந்து கிறிஸ்துவின் அன்பை பொதுவில் வெளிப்படுத்த
வேண்டுமென்று கேட்டுள்ளார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Lumen Fidei
என்ற முதல் திருமடல், இத்தாலியில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக
இருந்து வருகிறது. இத்திருமடல் விற்பனைக்கு வந்த கடந்த ஜூலை 5ம் தேதியிலிருந்து இதுவரை
இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Libreria Editrice Vaticana என்ற வத்திக்கானின் அதிகாரப்பூர்வ நூல் வெளியீட்டு நிறுவன
அதிகாரியின் கூற்றுப்படி, இந்நிறுவனத்தில் மட்டும் Lumen Fidei திருமடலின் இரண்டு இலட்சம்
பிரதிகள் விற்பனையாகியுள்ளன எனத் தெரிகிறது.