சிரியாவில் வேதியத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்த செய்திகளுக்கு வத்திக்கான் அதிகாரி
எச்சரிக்கை
ஆக.,23,2013. போர் மற்றும் மோதல்கள் இடம்பெறும் காலங்களில் தீர்ப்பிடுவதற்கு விரைவது,
குறிப்பாக ஊடகத்துறையினர் விரைந்து தீர்ப்பிட முயற்சிப்பது ஒருபோதும் உண்மைக்கு இட்டுச்செல்லாது
மற்றும் அமைதியைக் கொண்டு வராது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். சிரியாவின்
தமஸ்கு நகருக்கு வெளியே வேதிய ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றன என்ற செய்திகள் வெளியான
பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான
திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு எச்சரித்துள்ளார். சிரியாவின்
அரசுப் படைகள் நச்சுகலந்த வாயுக்களைப் பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு
தொலைக்காட்சி மறுத்துள்ள அதேவேளை, இந்த வேதியத் தாக்குதல்களில் ஆயிரத்துக்கு அதிகமானோர்
இறந்துள்ளனர் என சிரியாவின் எதிர்தரப்புப் படைகள் கூறுகின்றன என்றும் பேராயர் கூறினார். சிரியாவில்
நடந்துள்ள தாக்குதல்களில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது சரியாகத் தெளிவாக்கப்பட வேண்டும்
என்றுரைத்த பேராயர் தொமாசி, மோதல்கள் இடம்பெறும் இடங்களில் உடனடியாக ஒரு தீர்வுக்கு வருவது
நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எனவும் தெரிவித்தார். சிரியாவில் 2011ம் ஆண்டு
மார்ச் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் சண்டையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 10 இலட்சம் சிறார் உட்பட 17 இலட்சத்துக்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர்
என ஐ.நா. கூறியுள்ளது.