2013-08-23 15:34:06

எகிப்தில் வன்முறை முடிவுக்கு வர கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்


ஆக.,23,2013. எகிப்தில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறை முடிவுக்கு வரவும், குடியரசு, மாண்பு, சமயச்சுதந்திரம் ஆகிய விழுமியங்கள் பாதுகாக்கப்படவும் வேண்டுமென எருசலேமில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் சபைகளின் தலைவர்கள் செபித்தனர்.
எருசலேமிலுள்ள கிறிஸ்தவ சபைகளின் 13 முதுபெரும் தந்தையரும் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தின் இன்றையநிலை குறித்தும், அந்நாட்டில் கிறிஸ்தவ ஆலயங்களின் தூய்மைத்தன்மைக்கு கேடு நடந்திருப்பது குறித்தும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அப்பாவி மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் பயங்கரவாதச் செயல்கள், திட்டமிட்ட வன்முறைகள், உட்பிரிவுகள் ஆகியவற்றால் எகிப்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகின்றது.
எகிப்தில் சண்டையிடும் அனைத்துக் கட்சிகளும் வன்முறையையும் கொலைகளையும் நிறுத்தி தேசிய ஒற்றுமைக்காக உழைக்குமாறு கேட்டுள்ள அத்தலைவர்கள், இதற்கான அர்ப்பணமில்லாமல் இருந்தால், அந்நாடு உள்நாட்டுச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.