மக்களாட்சியின் அடிப்படை வேர் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு - கோவா தலத்திருஅவை
ஆக.22,2013. மக்களாட்சியின் அடிப்படை வேரான கிராமப் பஞ்சாயத்து அமைப்பை கோவா மாநில அரசு
சரிவரப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறது என்று கோவா தலத்திருஅவை குறை கூறியுள்ளது. கிராமங்களில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு, மாநில அரசு முடிவுகள்
எடுப்பது குடியரசின் அடிப்படையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று கோவா தலத்திருஅவையின்
சமுதாய நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் (CSJP) செயலர், அருள் பணியாளர் சாவியோ பெர்னாண்டஸ்
கூறினார். கோவா மாநிலத்தில் அமைந்துள்ள 200க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்து அமைப்புக்களுடன்
கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசு தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதையும் அருள்
பணியாளர் பெர்னாண்டஸ் எடுத்துரைத்தார். பஞ்சாயத்து அரசு என்ற சட்டத்தில் மாற்றங்களை
உருவாக்க கோவா மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.