2013-08-22 15:49:53

நைஜீரியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்கும் முயற்சி


ஆக.22,2013. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கையே நம்மிடையே நட்பை வளர்க்கவும், இந்நாட்டில் முன்னேற்றத்தைக் கொணரவும் வழி வகுக்கும் என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக, அபுஜாவில் நடைபெற்ற ஓர் ஒருமைப்பாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama அவர்கள் இவ்வாறு கூறினார்.
உரையாடல் ஒப்புரவு அமைதி மையம் என்ற இடத்தில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில், இவ்விரு மதத்தினருக்கும் இடையே நம்பிக்கையும், மதிப்பும் வளரவேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தல் நேர்மையான முறையில் முழுச் சுதந்திரத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மோதல்களின் விளைவாக சேதமாக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும் என்றும் தலைவர்கள் விண்ணப்பித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.