2013-08-22 15:47:14

நாம் காட்டும் ஒருமைப்பாடு நமது துயரத்தை நட்பாக மாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் தாக்லே


ஆக.22,2013. வெள்ளத்தின் கொடுமைகளைத் தாங்க நாம் காட்டும் ஒருமைப்பாடு நமது துயரத்தை, நட்பை வளர்க்கும் நேரமாக மாற்றும் என்று மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவைத் தாக்கிவரும் பெருமழையால் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், கர்தினால் தாக்லே அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய விடுத்துள்ள விண்ணப்பத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளோர், நாம் காட்டும் ஆதரவால் ஓரளவாகிலும் ஆறுதல் அடைவர் என்று கர்தினால் தாக்லே அவர்கள், வெரித்தாஸ் வானொலியில் வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் மணிலாவைத் தாக்கிய Maring என்றழைக்கப்படும் இந்தப் புயல் இதுவரை அந்நகர் கண்டிராத அளவு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
Paranaque மற்றும் Balanga மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருள் பணியாளர்களும், துறவியரும், பொது நிலையினரும் துயர் துடைப்புப் பணிகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.