திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களையும், இரண்டாம் ஜான் பால் அவர்களையும்
புனிதர்களாக உயர்த்தும் நாள் செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும்
ஆக.21,2013. செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு
பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களையும், முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் அவர்களையும்
புனிதர்களாக உயர்த்தும் நாளை அறிவிப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். புனிதர்
நிலை படிகளுக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள், அண்மையில்
வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இதனை அறிவித்தார். நடைபெறும் நம்பிக்கை
ஆண்டிலேயே இவ்விரு திருத்தந்தையரும் புனிதர்களாக்கப்படும் நிகழ்வு நடைபெறும் வாய்ப்புக்கள்
அதிகம் இருப்பதாக ஒரு சில செய்திகள் வெளிவந்தாலும், இந்நிகழ்வு வருகிற ஆண்டில் நடைபெறும்
என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்பு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்
என்பதையும் கர்தினால் Amato அவர்கள் எடுத்துரைத்தார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை
ஆரம்பித்து, திருஅவையில் புத்துணர்ச்சியைக் கொணர்ந்தவர் திருத்தந்தை 23ம் ஜான் என்றும்,
இந்தப் புத்துணர்ச்சியை நடைமுறை வாழ்வில் அறிமுகப்படுத்தியது திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
என்றும் கர்தினால் Amato தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.