2013-08-21 16:31:12

உரையாடல் வழியாக மட்டுமே நாம் உலகில் அமைதியைக் கொணரமுடியும் – ஜப்பான் மாணவர்களிடம் திருத்தந்தை


ஆக.21,2013. ஏனையக் கலாச்சரங்களுடனும் மதங்களுடனும் நாம் கொள்ளும் உரையாடல் நம்மை நலமான வழிகளில் வளர்க்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜப்பானின் Tokyo நகரில் உள்ள Gauken Bunri Seibu உயர்நிலைப் பள்ளியின் 200 மாணவர்களையும், 15 ஆசிரியர்களையும் இப்புதனன்று வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேற்று நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் வழியாக, வளரும் வாய்ப்புக்களை இளையோர் பெறுகின்றனர் என்று கூறினார்.
உரையாடல் வழியாக மட்டுமே நாம் உலகில் அமைதியைக் கொணரமுடியும் என்று கூறியத் திருத்தந்தை, வந்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் உரையாடல்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ள தான் வாழ்த்துவதாகக் கூறினார்.
மேலும், மலைப்பொழிவில் இயேசு கூறிய பேறுபெற்றோர் வார்த்தைகளும், மத்தேயு நற்செய்தியின் 25ம் பிரிவில் காணப்படும் இறுதித் தீர்ப்பு பகுதியும் நம் வாழ்வுக்கு தலைச்சிறந்த திட்டத்தை வகுக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் Twitter செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.