2013-08-17 15:51:10

பிலிப்பீன்சில் கப்பல் விபத்தில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்


ஆக.,17,2013. பிலிப்பீன்சின் Cebu துறைமுகத்தில் இவ்வெள்ளி இரவு இடம்பெற்ற கப்பல் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது செபமும் ஆறுதலும் நிறைந்த செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Cebu பேராயர் Jose S. Palma அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அவ்விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையின் செபமும் ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Cebu துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, 700க்கும் அதிகமான பயணிகளுடன் அங்கு நின்று கொண்டிருந்த தாமஸ் அக்குய்னாஸ் என்ற பயணியர் கப்பலுடன் மோதியதில் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர் மற்றும் 270க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை.
ஏழாயிரத்துக்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பீன்சில் கடல் விபத்து அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. 1987ம் ஆண்டில் தோனா பாஸ் என்ற கப்பல், எரிவாயுக் கப்பலுடன் மோதியதில் 4,300க்கும் அதிகமானோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.