2013-08-17 15:52:52

திருத்தந்தை பிரான்சிஸ் : குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போது நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது


ஆக.,17,2013. குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போதும், முதியோர் மருத்துவ உதவியின்றி இருக்கும்போதும் நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் அன்றாடத் திருப்பலிகளில், அர்ஜென்டீனா நாட்டின் ஒரு பெண் சிறைக்கைதி செய்த திருநற்கருணை அப்பங்களை கடந்த ஜூலை 18ம் தேதியிலிருந்து பயன்படுத்தி வருகிறார்.
அர்ஜென்டீனாவில்,“Gaby C” என்ற பெயரிலுள்ள ஒரு பெண் சிறைக்கைதி தனக்கு அனுப்பிய கடிதத்துக்கும், திருநற்கருணை அப்பங்களுக்கும் நன்றி தெரிவித்து கடந்த ஜூலை 17ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஜூலை 18ம் தேதியிலிருந்து அந்த திருநற்கருணை அப்பங்களைத் தனது அன்றாடத் திருப்பலிகளில் பயன்படுத்தவிருப்பதாக அதில் எழுதியுள்ளார்.
சிறையின் ஆன்மீக அருள்பணியாளர் Jorge Garcia Cueva, உள்ளூர்ப் பங்குத்தந்தை Juan Ignacio Pandolfini ஆகிய இருவரும் அப்பெண்ணைச் சந்தித்த பின்னர், அப்பெண் சிறையில் திருநற்கருணை அப்பங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இப்பெண் சிறையில் வைக்கப்பட்ட நாள்முதல் அலைக்கழிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார் என்று இவ்வருள்பணியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.