ஆக.,16,2013. “நீதியில் பூமியில் அமைதி” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18, வருகிற ஞாயிறன்று
இந்தியாவில் நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை
23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்ட, ‘இவ்வுலகில் அமைதி’ என்ற
திருமடலின் 50ம் ஆண்டின் நினைவாக இந்தியத் திருஅவை, இந்த நீதி ஞாயிறுக்கு இந்தத் தலைப்பைத்
தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நீதி ஞாயிறு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர்
பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம், ‘இவ்வுலகில்
அமைதி’ என்ற திருமடல் வழிகாட்டும் கோட்பாடுகளின் வழியில் கத்தோலிக்கர் நடக்குமாறு கேட்டுள்ளார். உண்மை,
நீதி, அன்பு, சுதந்திரம் ஆகிய தூண்களின்மீது புதிய உலகை கட்டியெழுப்புவதற்கு இத்திருமடல்
அமைதியின் புதிய ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பரிந்துரைக்கின்றது என்றும் அருள்பணி
சார்லஸ் இருதயம் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்துக்கு அடுத்துவரும் ஞாயிறு,
நீதி ஞாயிறாக இந்தியத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வருகிற
ஞாயிறன்று 30வது நீதி ஞாயிறு ஆகும்.