'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு வசதிகளும்' - ஐ.நா.வின்
அண்மைய அறிக்கை
ஆக.15,2013. உறுதியான தலைமைத்துவமும், தேவையான நடவடிக்கைகளும் இருப்பதால், குடிநீர்,
மற்றும் தகுதியான கழிவு வசதிகள் ஆகிய மில்லென்னிய இலக்குகளை அடையும் முயற்சிகள் பலனளித்து
வருகின்றன என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த
கழிவு வசதிகளும்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கையை அண்மையில் வெளியிட்ட
ஐ.நா.வின் இணைச் செயலர் Jan Eliasson அவர்கள், இந்த இலக்குகளை அடைய இன்னும் நாம் முயற்சிகள்
மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வளரும் நாடுகள் என்று அழைக்கப்படும்
15 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மில்லென்னிய இலக்குகளை அடைவதில் இந்நாடுகள்
60 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மில்லென்னிய இலக்குகளை அடையும்
இறுதி ஆண்டு 2015 என்பதையும், அதற்கு முன்னதாக 'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு
வசதிகளும்' என்ற இலக்கைக் குறித்த கூட்டம் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும்
Jan Eliasson அவர்கள் அறிவித்தார்.