திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகையும் அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு
அர்ப்பணிக்கவுள்ளார்
ஆக.14,2013. வருகிற அக்டோபர் 13, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகையும்
அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார் என்று புதிய நற்செய்திபணி திருப்பீட
அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்கள் கூறியுள்ளார். அக்டோபர் 13ம் தேதி
வத்திக்கானில் கொண்டாடப்படவிருக்கும் மரியன்னை நாள் கொண்டாட்டங்களில், திருத்தந்தை ஆற்றும்
திருப்பலியின்போது, பாத்திமா அன்னையின் திரு உருவம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் என்று
பாத்திமா அன்னை திருத்தலத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. அக்டோபர் 13ம் தேதி வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில்
பாத்திமா அன்னையின் திரு உருவம் வைக்கப்படுவது நம்பிக்கை ஆண்டின் ஒரு தனிப்பட்ட முயற்சி
என்று, பேராயர் Fisichella அவர்கள் கூறினார். மேலும், அக்டோபர் 12, 13 ஆகிய நாள்களில்
பாத்திமா நகரை நோக்கி திரளான மக்கள் மேற்கொள்ளும் ஆண்டு திருப்பயணத்தின் இறுதியில் நடைபெறும்
திருப்பலியினை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள் தலைமையேற்று
நடத்துவார் என்றும் பாத்திமா அன்னை திருத்தலம் அறிவித்துள்ளது.