ஜப்பான் கத்தோலிக்கருக்கு மரியின் விண்ணேற்பு விழா முக்கியமானது, மறைபோதகர்
ஆக.,13,2013. மரியின் விண்ணேற்பு விழா, இறப்பு மற்றும் நிலைபேறான வாழ்வோடு தொடர்புடையதாக
இருப்பதால் இவ்விழா ஜப்பான் கத்தோலிக்கருக்கு முக்கியமானதாகும் என்று ஆஸ்திரேலிய மறைப்பணியாளர்
ஒருவர் தெரிவித்தார். ஜப்பானின் Nagoyவில் இயேசுவின் திருஇதய சபையினர் நடத்தும் Mikokoro
மையத்தை நடத்தும் அச்சபையின் மறைப்பணியாளர் அருள்பணி Keith Humphries, மரியின் விண்ணேற்பு
விழாவன்று கத்தோலிக்கர் திருப்பலியில் கலந்துகொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவர்
என்று கூறினார். இவ்விழாத் திருப்பலியில் குடும்பங்களில் இறந்த அனைவரின் பெயர்களும்
வாசிக்கப்படும், சிலநேரங்களில் இத்திருவழிபாடு மணிக்கணக்காய் நடைபெறும் எனவும் அருள்பணி
Humphries கூறினார். மரியின் விண்ணேற்பு விழா ஆகஸ்ட் 15ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது.
இதே ஆகஸ்ட் 15ம் தேதி, 1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது.
எனவே ஜப்பானில் மரியின் விண்ணேற்பு விழாவன்று, இந்த அறிவிப்பு தினம் நினைவுகூரப்படுகின்றது.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஹிரோஷிமாவும், 9ம் தேதியன்று நாகசாகியும் அணுகுண்டுகளால்
தாக்கப்பட்டதில் ஏறக்குறைய 2,46,000 பேர் இறந்தனர்.