திருத்தந்தை பிரான்சிஸ் : ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குமாறு கிறிஸ்தவருக்கும்
முஸ்லீம்களுக்கும் அழைப்பு
ஆக.12.2013. ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குமாறு, சிறப்பாக, புதிய தலைமுறைகளுக்கு
கல்வி வழங்குவதன் வழியாக அதனைச் செயல்படுத்துமாறு கிறிஸ்தவரையும் முஸ்லீம்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இரமதான் பண்டிகையைக் கொண்டாடியுள்ள உலகெங்கும் வாழும் முஸ்லீம்
சகோதரர்களைத் தான் வாழ்த்துவதாக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை
பிரான்சிஸ், இவ்வாண்டின் இப்பண்டிகைக்கென தான் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்திய
கருத்துக்களையும் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கல்வி வழியாக ஒருவர்
ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குவிப்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படவிருக்கும் மரியின்
விண்ணேற்பு விழா பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நாளில் நாம் அன்னைமரியைக் கவுரவிக்கிறோம்
என்றும் தெரிவித்தார்.