ஆக.07,2013. ஆளில்லா ஆராய்ச்சி விண்கலமான ‘கியூரியாஸிட்டி’, செவ்வாய்க் கோளத்தில் தரையிறங்கிய
ஓராண்டு நிறைவு நாள், அமெரிக்க NASA விண்வெளி ஆய்வு மையத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று
(ஆக.6)சிறப்பிக்கப்பட்டது. செவ்வாய்க் கோளத்தில் அறிவியலாளர்கள் முன்கூட்டியே கணித்துவைத்த
இடத்துக்குச் சற்று ஒரு மைல் தூரத்தில் இந்த ஆராய்ச்சி விண்கலம் தரையிறங்கியது. பூமியிலிருந்து
57 கோடி கிலோ கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு கோளத்தில் இந்த அளவுக்குத் துல்லியமாக
ஒரு விண்கலத்தைத் தரையிறக்க முடிந்தென்பதே ஒரு பெரிய சாதனைதான் என்று சொல்லப்படுகின்றது. ஒரு
காலத்தில் நுண்ணியிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் செவ்வாயில் இருந்திருக்குமா
என்று கண்டறியலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த இடத்தில் கியுரியாஸிட்டி தரையிறக்கப்பட்டது. கியூரியாசிட்டி
விண்கலம், 155 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் இறங்கியது. இந்தப் பள்ளத்தையொட்டி
ஐந்து கிலோமீட்டர் உயரமுடைய ஒரு மலையும் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் படுகை
போன்ற நில அமைப்பு இருப்பது, ஒரு காலத்தில் இங்கே கணிசமான அளவில் நீர் ஓடியதைச் சுட்டிக்
காட்டுகிறது. வாகனம் தரையிறங்கிய நேரத்தில் கிளம்பிய புழுதியை வைத்தே சில முக்கிய
தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தப் புழுதியில் ஒட்டிய கூழாங்கற்களாலான பாறைத் துண்டுகள் இருந்தன.
பூமியில் ஆற்றங்கரைகளில் காணப்படுகின்ற கூழாங்கற்கள் போலவே இவையும் இருந்தன. ஒரு காலத்தில்
செவ்வாய் கோளத்தின் மேற்பரப்பில் மட்டும் நீர் ஓடியிருக்கவில்லை நிலத்தடி நீர் ஓட்டமும்
இருந்துள்ளது என கியூரியாசிட்டி விண்கலம் சேகரித்த பாறைகள் காட்டுகின்றன.