கர்தினால் டர்க்சன் : துன்புறுவோரை ஒதுக்கிவிடாமல் அவர்களுடன் இருப்போம்
ஆக.07,2013. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்போரை ஒதுக்கிவிடாமல் அவர்களின் தேவைகளை
நிறைவேற்றுவோம், துன்புறுவோரை ஒதுக்கிவிடாமல் அவர்களுடன் இருப்போம் என்று கர்தினால் பீட்டர்
டர்க்சன் நாகசாகியில் கூறினார். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி
நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதன் 68ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டுவரும்,
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், நாகசாகியில்
இப்புதனன்று இவ்வாறு கூறினார். நாகசாகியில் அமைதிக்கான பல்சமய உரையாடல் அவையினருடன்
இரவு உணவருந்தியவேளை இவ்வாறு பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், தனியாள்களும், சமூகங்களும்
பேராசை மற்றும் வெறுப்புணர்வுகளுக்கு உட்படும் சோதனைகளை எப்போதும் எதிர்நோக்கி வருகின்றன,
ஆயினும் அவர்கள் அதிலே மூழ்கியிருக்க வேண்டியது இல்லை என்றும் கூறினார். அநீதிகள்
மற்றும் சண்டைகளுக்குக் காரணமாகும் சமூகச் சூழல்களையும் அமைப்புமுறைகளையும் களைவதற்கு
நாம் துணிச்சலுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன். ஜப்பானின்
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதன் ஆண்டு நிறைவையொட்டி ஜப்பான்
ஆயர்கள் ஒவ்வோர் ஆண்டும், “அமைதிக்கான பத்து நாள்கள்” என்ற ஒரு நிகழ்வைக் கடைப்பிடித்து
வருகின்றனர். இவ்வாண்டின் இந்நிகழ்வில் கடந்த திங்கள் முதல் கலந்து கொண்டுவரும்
கர்தினால் டர்க்சன் அவர்கள், வருகிற வெள்ளிக்கிழமையன்று ஜப்பானில் தான் மேற்கொண்டுள்ள
பயணத்தை நிறைவு செய்வார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம்
தேதி நாகசாகியிலும் உலகில் முதன்முறையாக அணுகுண்டுகள் வீசப்பட்டன.