அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உறுதியுடன் வாழும் கத்தோலிக்கருக்கு நைஜீரீய ஆயர் பாராட்டு
ஆக.07,2013. நைஜீரியாவில் Boko Haram இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தொடர் தாக்குதல்களுக்கு
மத்தியில் அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்து வருவதைப்
பாராட்டியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர். நைஜீரியாவின் வடகிழக்கேயுள்ள Maiduguri நகரம்,
Boko Haram இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களின் மையமாக இருந்து வருகின்றது
என்றுரைத்த அந்நகர ஆயர் Oliver Doeme, அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கத்தோலிக்கர் உறுதியுடன்
வாழ்ந்து விசுவாசத்துக்குச் சாட்சிகளாக உள்ளனர் என்று கூறினார். Aid to Church in
Need என்ற பிறரன்பு நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த ஆயர் Doeme, மரண ஆபத்துக்கள் மற்றும்
அச்சுறுத்தல்கள் இருக்கின்றபோதிலும், அருள்பணியாளர்கள் பங்குகளிலே தொடர்ந்து தங்கியிருந்து
தங்களது மறைப்பணியைத் துணிச்சலுடன் செய்து வருகின்றனர் என்று கூறினார். முஸ்லீம்கள்
அதிகமாக வாழும் பகுதியிலுள்ள Maiduguri மறைமாவட்ட்த்தில் முப்பது குருத்துவ மாணவர்கள்
உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார் ஆயர் Doeme.